கோவை: கிருஷ்ணகிரி மாவட்டம், பூச்சம்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகள் மோனிசா (19). கோவை பீளமேடு பகுதியில் அமைந்துள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியில் பிஎஸ்.சி இறுதியாண்டு படித்து வருகிறார். விடுதியில் தங்கி பயின்று வரும் இவர் திங்களன்று இரவு நீண்ட நேரமாகியும் விடுதிக்கு வராததால் விடுதிக் காப்பாளர் மோனிசாவின் தந்தைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து, கோவை வந்த கிருஷ்ணமூர்த்தி பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மற்றோரு சம்பவம்:
கோவை மாவட்டம், ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் ராஜேஸ்வரி (17) கோவையில் தனியார் கல்லூரியில் பயின்று வருகிறார். இந்நிலையில், திங்களன்று கல்லூரிக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு
சென்ற ராஜேஸ்வரி இரவு நீண்ட நேரமாகியும் வீடுதிரும்பவில்லை.
இதனைத்தொடர்ந்து ஆறுமுகம், கல்லூரி மற்றும் அவரது தோழிகள் வீட்டில் ராஜேஸ்வரியை தேடியுள்ளார். எங்கும் அவர் கிடைக்காத நிலையில், ரத்தினபுரி காவல் நிலையத்தில் செவ்வாயன்று ஆறுமுகம் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
கோவையில் அடுத்தடுத்து இரு கல்லூரி மாணவிகள் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.