கோவையில் அதிகரித்துவரும் ஒரு எண் லாட்டரி சீட்டுகளின் புழக்கத்தை தடுத்து நிறுத்தி, அதனை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
அம்மனுவில் கூறியிருப்பதாவது:-
''கோவை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட ஒரு எண் லாட்டரி சீட்டுகளின் புழக்கம் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இதனால் பாதிக்கபட்ட பொதுமக்கள் துடியலூர் மற்றும் மாநகர எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் தொடர்ந்து வாய்மொழியாக புகார் மனு அளித்தும் காவல் துறையோ மாவட்ட நிர்வாகமோ இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
கோவை மாநகரில் பல பகுதிகளில் ஆன்லைன் மற்றும் குறுஞ்செய்திகள் மூலம் தடைசெய்யப்பட்ட லாட்டரி தொழில் ஏகபோகமாக நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான குடும்பங்கள் அடிமையாகி வருமானத்தை முழுவதுமாக இதில் செலவு செய்துவிடும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, மாவட்ட நிர்வாகம் இதில் கவணம் செலுத்தி லாட்டரி நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என கூறியுள்ளனர்.
மேலும், துபாயில் இந்திய மீனவர்கள் வேலை செய்த நிறுவனங்களில் ஊதியம் வழங்காமல், அவர்களின் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிலருக்கு சம்பள பாக்கியை தராமல் விமான பயண சீட்டு மட்டும் கொடுத்து இந்தியாவிற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அந்நிறுவனங்களின் மீது மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து, வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனக் கூறி மாவட்ட ஆட்சியரிடம் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் மனு அளித்தனர்.