சட்டமன்ற தேர்தலின் போது ஓட்டுக்கு பணம் கொடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இடைத்தேர்தல் அறிவிக்கப்படுள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவான் குற்றம்சாட்டியுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார். டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல் காந்தியை சந்தித்த போது தமிழக இடைத்தேர்தலில் திமுக போட்டியிடும் தொகுதிகளில் வெற்றிக்காக காங்கிரஸ் தொண்டர்கள் உழைக்க வேண்டும் என ராகுல் அறிவுறுத்தியதாக தெரிவித்த அவர் உள்ளாட்சி தேர்தலிலும் திமுகவுடன் கூட்டணி தொடரும் என நம்பிக்கை தெரிவித்தார்.
தற்போதைய தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசருடன் சுமூக உறவு உள்ளதாக தெரிவித்த அவர் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சி தொடர்பாக தொடர்ந்து அவ்வப்போது கருத்துக்கள் கூறி வருவதாகவும் அவர் அப்போது கூறினார். முதல்வருக்கு சிகிச்சை அளிக்க லண்டன் மருத்துவர் 3 முறை வந்துள்ளது, அவரது உடல்நிலை முன்னேற்றம் அடைந்து வருவதை உணர்த்துவதாக தெரிவித்த அவர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடைபெற்ற போராட்டங்களில் காங்கிரஸ் கட்சியினர் இன்னும் அதிக அளவில் கலந்து கொண்டிருக்க வேண்டும் என தாம் கருதுவதாக கருத்து தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியில் தமக்கு புதிய பதவி அறிவிக்கப்பட்டால் அதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வதாகவும் இளங்கோவன் அப்போது தெரிவித்தார்.