கோவை மாவட்ட அனைத்து ஜமாத் மற்றும் இஸ்லாமிய அமைப்புகளின் கூட்டமைப்பின் சார்பில் ரயில் நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் இன்று பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட அனைத்து ஜாமத்களின் ஒருங்கிணைபாளர் இனாயத்துல்லாஹ் பத்திரிக்கையாளர்களிடம் பேசுகையில்:-
பாஜக அரசு கொண்டுவரும் பொது சிவில் சட்டம் என்பது, முஸ்லீம்களின் தனி நபர் சட்டத்தை பாதிக்கும் வகையில் உள்ளது. இந்தியாவில் பிறந்த ஒவ்வொருவருக்கும், அவரது மத நெறிகளை பின்பற்றி வாழ உரிமை உண்டு, அதன்படி, முஸ்லீம்களுக்கு சரியத்து சட்டம் உள்ளது. இந்த சட்டமானது குர்-ஆனின் நெறிகளுக்கும், நபிகள் நாயகத்தின் வழிகாட்டுதல்களுக்கும் உட்பட்டது. தற்போது கொண்டுவரும் பொது சிவில் சட்டத்தால் முஸ்லீம்களின் கலாச்சாரம் மற்றும் நெறிகள் முடக்கப்படுவதற்கான அபாயம் ஏற்பட்டுள்ளது. அதன்படி, அனைத்து ஜமாத் கூட்டமைப்பின் படி, முஸ்லீம்கள் அனைவரும் பொது சிவில் சட்டத்தை எதிர்பதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக நாளை கைய்யெழுத்து இயக்கத்தை கோவை மாவட்டம் முழுவதும் நடத்த தீர்மானித்துள்ளோம். அனைவரும் பொது சிவில் சட்டத்திற்கு எதிராக கையெழுத்திட உள்ளனர். கோவை மாவட்டத்தில் உள்ள 135 மசூதிகளிலும் நாளை கையெழுத்து இயக்கம் தொடங்குகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பல்வேறு முஸ்லீம் அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.