கேரள மாநிலம் அகளி பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளிங்கிரி. இவரது மகன் திருமூர்த்தி (21). கோவை சித்ரா பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் உணவு விடுதியில் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், வியாழனன்று (இன்று) காலை உணவு விடுதியின் மின்சாரக் கட்டுப்பாட்டு அறையில் திருமூர்த்தி மயங்கிய நிலையில் கீழே கிடந்துள்ளார். இதனைக் கண்ட அந்த உணவு விடுதி ஊழியர்கள் உடனடியாக அவரை மீட்டு கோவை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து தகவலறித்து வந்த பீளமேடு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.