தீபாவளி அக்டோபர் 29ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், பொதுமக்கள் உக்கடம், காந்திபுரம் பகுதிகளில் உள்ள துணிக் கடைகளில் ஆடைகள் வாங்க குவிந்து வருகின்றனர். இதனால் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் கோவை மாவட்ட போக்குவரத்துத் துறை சில மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது.
அதன்படி, வருகின்ற அக். 29ம் தேதியன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஒப்பணக்கார வீதியில் பொதுமக்கள் அதிகளவில் குவிவதால் பாலக்காடு சாலையில் இருந்து காந்திபுரம் செல்லும் பேருந்துகள் அனைத்தும் வருகிற 22ம் தேதி முதல் 29ம் தேதி வரை உக்கடத்தில் இருந்து வாலாங்குளம் புறவழிச்சாலை வழியாக கிளாசிக் டவர் சென்று ரயில்நிலையம் வழியாக செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.
பாலக்காடு சாலையில் இருந்து பூமார்க்கெட் மற்றும் மேட்டுப்பாளையம் சாலை செல்லும் பேருந்துகள் அனைத்தும் உக்கடத்தில் இருந்து பேரூர் புறவழிச்சாலை வழியாக செட்டி வீதி, சலீவன் வீதி, காந்திபார்க், டி.பி.சாலை வழியாகச் சென்று மேட்டுப்பாளையம் சாலையை அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.
அவிநாசி சாலை, திருச்சி சாலை மற்றும் ரயில்நிலையத்திலிருந்து வரும் பேரூர், ஈஷா யோகா, காருண்யா செல்லும் பேருந்துகள் அனைத்தும் மாற்றுவழியில் டவுன்ஹால், உக்கடம் காவல் நிலையம் வந்து வலதுபுரம் அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.
ரயில்நிலையத்திலிருந்து டவுன்ஹால் வழியாக காந்திபார்க் மற்றும் மேட்டுப்பாளையம் சாலை செல்லக் கூடிய பேருந்துகள் அனைத்தும் டவுன்ஹால், உக்கடம் வந்து பேரூர் புறவழிச்சாலை வழியாக செட்டிவீதி, சலீவன் வீதி, காந்திபார்க், டி.பி.சாலை வழியாகச் சென்று மேட்டுப்பாளையம் சாலையை அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்ல வேண்டும்.
மேலும், ஒப்பணக்கார வீதி, ராஜ வீதிகளில் உள்ள வணிக வளாகங்களில் பணிபுரியும் ஊழியர்களின் வாகனங்களை எக்காரணத்தைக் கொண்டும் பொதுமக்கள் நிறுத்தும் இடங்களில் நிறுத்தக் கூடாது.
பொதுமக்கள் தங்களது இரண்டு சக்கர வாகனங்களை ராஜ வீதி, வைசியாள் வீதியில் ஒருபுறமும், சோளக்கடை முக்கில் உள்ள மாநகராட்சி பார்க்கிங்கிலும் நிறுத்திக் கொள்ள வேண்டும். ஒப்பணக்கார வீதியில் இரு புறமும் வாகனங்களை நிறுத்தக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.