மேட்டூர்: மேட்டூர் அணை நீர்மட்டம் மளமளவென சரிவதால், நீர்பரப்பு பகுதியிலுள்ள நந்தி சிலை, நேற்று பாதிக்கு மேல் வெளியில் தெரிந்தது. சேலம் மாவட்டம், மேட்டூர் அணை, பண்ணவாடி நீர்பரப்பு பகுதியில் மூழ்கியுள்ள, ஜலகண்டேஸ்வரர் கோவில் நந்தி சிலை, கிறிஸ்தவ ஆலயத்தின் ஒற்றை கோபுரம் ஆகியவை, நீர்மட்டம் குறையும் போது வெளியே தெரியும். குறிப்பாக, 70 அடியாக சரியும்போது, நந்தி சிலை முகப்பு வெளியில் தெரியும். டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு, 12 ஆயிரம் கனஅடி நீர் திறப்பதால், மேட்டூர் அணை நீர்மட்டம் மளமளவென சரிகிறது. நேற்று நீர்மட்டம், 64.65 அடியாகவும், நீர் இருப்பு, 28.27 டி.எம்.சி.,யாகவும் சரிந்ததால், நீர்பரப்பு பகுதியிலுள்ள நந்தி சிலை, பாதிக்கு மேல் வெளியில் தெரிந்தது, விவசாயிகளை வேதனையில் ஆழ்த்தியது.