உலக அளவில் மார்பகக் கட்டிகளை சிறுசிறு துகள்களாக உடைத்து, அவற்றை ஊசியில் உறிஞ்சி எடுக்கும் முறை நடைமுறையில் உள்ளது. இதில் எவ்வித தழும்பும் ஏற்படாது. கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில் இத்தகைய உறிஞ்சி எடுக்கும் கருவி உதவியுடன் கட்டிகள் நீக்க சிகிச்சை மேற்கொள்ளப்பட இருக்கிறது. இந்த முறையை மார்பக படமாக்கல் மற்றும் ஆய்வு ஆலோசகரான மருத்துவர் ரூபா ரங்கநாதன் வெள்ளியன்று (இன்று) அறிமுகம் செய்தார்.

சில ஆண்டுகளுக்கு முன் சான் டியாகோ பல்கலைக் கழகத்தில் படிக்கும்போதே இம்முறை செயல்பாட்டில் உள்ள மார்பக பரிசோதனை மையத்தில் பணியாற்றி ஆய்வும் மேற்கொண்டவர் மருத்துவர் ரூபா. மார்பக படமாக்கல், பரிசோதனை மற்றும் கதிரியக்க நிபுணராக 15 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் பெற்றவர்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ''இளம் பெண்களின் மார்பகங்களில் எவ்வித வலியும், தழும்பும் இல்லாமல் முழுமையாக கட்டியை அகற்றும் சிகிச்சை உண்மையில் பிரமிக்க வைப்பதாக உள்ளது. இந்தியாவில் சில மருத்துவமனைகளில் மட்டுமே இத்தகைய சிகிச்சை அளிக்கும் முறை உள்ளது. தற்போது அது கோவை மெடிக்கல் சென்டரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வெற்றிடத்தை உருவாக்கி, உறிஞ்சி எடுக்க உதவும் இந்த கருவியானது கட்டிகளை நீக்க மட்டுமின்றி ஒரு பகுதியில் உள்ள சந்தேகத்திற்கு இடமான, உணர முடியாத திசுக்களை ஆராய்ந்து கண்டறியவும் உதவும்'' என்றார்.
கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் நல்ல ஜி.பழனிசாமி கூறுகையில், ''அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் பெண்களின் மார்பக பிரச்சனைகளை தீர்க்க பல்வேறு நவீன மருத்துவ வசதிகள் உள்ளன. கோவையில் அத்தகைய வசதிகள் கொண்ட ஒரு மருத்துவ மையத்தை ஏற்படுத்தியிருப்பது மருத்துவத்தில் ஒரு புரட்சிகர மாற்றம். இந்த முறையில் முன்னோடியாக ஒரே இடத்தில் பெண்களின் பிரச்சனைகளுக்கு சரியான சிகிச்சை அளிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தழும்பு இல்லாத இந்த மார்பக அறுவை சிகிச்சை முறையானது மார்பக மையத்தை மேலும் ஒரு படி உயரச் செய்துள்ளது'' என்றார்.
