காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், இதற்கு மத்திய அரசு மறுப்பு தெரிவிப்பதைக் கண்டித்தும் தமிழகத்தில் அதிமுக, பாஜக-வைத் தவிர பல்வேறு கட்சியினர், விவசாய சங்கத்தினர் கடந்த சில நாட்களாக ரயில் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக நாம் தமிழர் கட்சியை சேர்ந்தோர் வெள்ளியன்று (இன்று) கோவை ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து, போராட்டத்தில் பங்கேற்ற வீரத்தமிழர் முன்னணியின் மண்டல பொருளாளர் அருண் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''தமிழகத்திற்கு காவிரி நீரை விடக்கூடாது என்பதில் கர்நாடக அரசை விட மத்திய பாஜக அரசு மும்முரமாக உள்ளது. கடந்த 2007ல் இருந்து காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான வழக்கு நடைபெற்று வரும் நிலையில், உச்ச நீதிமன்றம் இதுகுறித்து உத்தரவிட அனுமதியில்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது. நடுநிலையாக செயல்படுவதாகக் கூறி உறுதிமொழியேற்ற மத்திய அமைச்சர்கள் தற்போது கர்நாடகம் பக்கம் சாய்ந்து விட்டனர்.

உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால், மத்திய அரசு அலுவலகங்களை பூட்டு போட்டும், வரி கொடுக்காத போராட்டமும் நடத்துவோம்'' என்று அவர் கூறினார்.

இதனைத்தொடர்ந்து, ரயில் நிலைய முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட 2 பெண்கள் உட்பட 54 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

