கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கடந்த மாதம் 22-ஆம் தேதியன்று மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து, அவரது இறுதி ஊர்வலத்தின் போது கோவை மாவட்டம் முழுவதும் வன்முறை சம்பவங்கள் ஏற்பட்டன. அப்போது, பேருந்துகள், பொதுமக்களின் வாகனம், காவல்துறை வாகனம் மற்றும் பல கடைகளுக்கு தீ வைக்கப்பட்டன.
இதைத்தொடர்ந்து, கலவரத்தில் ஈடுபட்டதாக 800-க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர். இதில், வன்முறையில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்டவர்களில் கார்த்திக், பிரவீன்குமார், பிரதீப்குமார் ஆகிய மூன்று பேரை குண்டர் சட்டத்தில் அடைக்க மாவட்ட ஆட்சியரிடம் துடியலூர் காவல் துறையினர் கேட்டுக் கொண்டனர்.
இதன்பேரில் அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அவர்களை துடியலூர் காவல் துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவை வேலூர் சிறையில் உள்ள கார்த்திக் மற்றும் திருச்சி சிறையில் உள்ள பிரவீன்குமார், பிரதீப்குமார் ஆகியோரிடம் வழங்கினர்.