வங்க கடலில் புயல் சின்னம் உருவாகி உள்ளதால், ராமேஸ்வரம் அருகே பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. சென்னையில் இருந்து தென் கிழக்காக 450 கி.மீ., துாரத்தில் வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி உள்ளது. இதனால் தமிழகம், ஆந்திரா கடலோர பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்யும் என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதையடுத்து ராமேஸ்வரம் அருகே பாம்பன் துறைமுக அலுவலகத்தில் நேற்று மாலை 1ம் எண் தொலைதுார புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. இதன்மூலம் பாம்பன் கடலில் கப்பல், படகுகள் பாதுகாப்புடன் நிறுத்தி வைக்கவும், ஆழ்கடலில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.