தமிழக முதல்வர் விரைவில் குணமடைய வேண்டி கோவையில் வடஇந்திய சமாஜ் அமைப்பினர் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட உள்ளனர்.
தமிழக முதல்வர் உடல் நலக் குறைவின் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவர் விரைவில் குணமடைய வேண்டி பல்வேறு அரசியல் கட்சியினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதிமுக, உறுப்பினர்களும், தொண்டர்களும் ஆங்காங்கே பல்வேறு விதமான வழிபாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள சேவா ஆசிரமத்தில் வடஇந்தியர் சமாஜ் அமைப்பினர், முதல்வர் ஜெயலலிதா குணமடைய வேண்டி ஞாயிறன்று (இன்று) சிறப்பு பிரார்த்தனை நடத்த உள்ளனர். இதுகுறித்து நம் நிருபரிடம் அந்த அமைப்பின் தலைவர் சரவன் போத்ரா கூறுகையில்,
''முதல்வர் குணமடைய வேண்டி இன்று புனித பிரார்த்தனை, மகாருத்ரா அபிஷேகம், மகா மிருத்துஞ்சேயா ஹோமம் உள்ளிட்ட சிறப்பு பிரார்த்தனைகளும், அன்னதானமும் வழங்க திட்டமிட்டுள்ளோம். இதில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி, அதிமுக உறுப்பினர் அம்மன் கே.அர்ஜூனன், அமைச்சர் நாகராஜ், பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சித் தலைவர் பி.ஆர்.ஜி. அருண் குமார் ஆகியோர் பங்கேற்று வழிபாட்டில் ஈடுபட உள்ளனர்.
மேலும் இதில், கோவையில் உள்ள வட இந்தியர்கள், அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அதிகளவில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது'' என தெரிவித்தார்.