தற்கால சூழ்நிலையில் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணத்தால் மக்கள் அதிகளவில் பயனடைந்து வருகின்றனர். ஆனால், எந்தளவிற்கு பயன்பெருகின்றனறோ, அந்த அளவிற்கு ஆபத்தான பின்விளைவுகளையும் சந்திக்க நேரிடுகிறது.
இப்போதெல்லாம் மக்கள் அதிகளவில் ஆன்லைன் வர்த்தகத்தையே பெரிதும் பயன்படுத்துகின்றனர். இது அவர்களின் நேரத்தையும், சிரமத்தையும் குறைப்பதாக நம்புகின்றனர். மேலும், இணையதள வர்த்தகமும் மாதத் தவனை முறை, காப்பீடு, வட்டியில்லா விற்பனை என ஏராளமான சலுகைகளை வழங்கி வருவதால் மக்களும் இதனை நாடிச்செல்கின்றனர்.

இதனைப் பயன்படுத்திக்கொள்ளும் சில சமூக விரோதிகள் பல்வேறு விதமான நூதனமுறையில் பொதுமக்களிடம் இருந்து பணம்பறித்து வருகின்றனர்.
இதுகுறித்து, சைபர் கிரைம் போலீஸ் ஆய்வாளர் ராஜன் நம்மிடம் கூறுகையில்,
''கோவை மாநகரத்தில் கடந்த வருடம் மட்டும் 300க்கும் மேற்பட்ட இணையதள வர்த்தக மோசடி குறித்தான வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேப்போன்று ஒரு இணையதளம் மூலம் குற்றத்தில் ஈடுபட்ட வாலிபர் கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தில் மாதத் தவனை பிரிவில் தன்னை உறுப்பினராக அந்த வாலிபர் முதலில் இணைத்துள்ளார். பின் அங்குள்ள வாடிக்கையாளர்களின் முகவரி உள்ளிட்ட தகவல்களை இணையத்தில் இருந்து திருடி அந்த முகவரியில் உள்ள கைபேசி எண்ணை மட்டும் மாற்றியுள்ளார். இதன்பின், வாடிக்கையாளர்களின் முகவரியில் மாதத் தவனை முறையில் போலியாக பல பொருட்களை பதிவு செய்து பெற்றுள்ளார். இவர் பிளிப்கார்ட், மைன்ட்ரா, அமேசான், ஸ்னேப்டீல் உள்ளிட்ட இணையதள வர்த்தகத்தில் பொருட்களை மாதத்தவனை முறையிலும், வட்டியில்லா முறையிலும் ஆர்டர் செய்துள்ளார்.
பொருட்கள் வந்த பின் போலியான முறையில் அதனை பெற்றுள்ளார். இதனிடையே, தொடர்ந்து ஒரே முகவரியில் பொருட்கள் மாதத்தவனை முறையில் பெருவது குறித்து பஜாஜ் நிறுவனத்தில் சந்தேகம் எழுந்ததைத்தொடர்ந்து அவர்கள் சைபர் கிரைமில் புகார் அளித்தனர்.
இதனைத்தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் இந்த நூதனமுறை திருட்டில் ஈடுபட்டவர் முகமது ஆசிக் (23) என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 10 பேரின் கணக்கில் இருந்து பொருட்களை ஆர்டர் செய்ததும், அதில், 3 விலை உயர்ந்த தொலைக்காட்சிப் பெட்டி, 3 ஆப்பில் ஐ போன் உள்ளிட்டு மொத்தம் ரூ.5.5 லட்சம் மதிப்பில் பொருட்களை பெற்றுள்ளதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
தற்போது அவரிடம் இருந்து அந்த பொருட்களும், 3 லட்சம் ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவருக்கு உறுதுணையாக இருந்து செயல்பட்ட ரியாசுதீன் (30) என்ற வாலிபர் தலைமறைவாகியுள்ளார். அவரை தேடும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். ஏடிஎம் அட்டையை யாரிடம் கொடுத்தாலும் அதனை தன் கண்பார்வையிலேயே வைத்துக்கொள்ள வேண்டும். பல இடங்களில் பொருட்களை வாங்கிவிட்டோ, உணவகத்திலோ மக்கள் தங்களது ஏடிஎம் அட்டையை ஊழியர்களிடம் கொடுத்துவிடுவது வழக்கம்.
அவ்வாறு தருவதன் மூலம் அவர்கள் சில தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்தி அந்த ஏடிஎம் அட்டையின் முழுத் தகவல்களையும் தெரிந்து போலியாக பணத்தைக் கைப்பற்றி விடுகின்றனர். இந்த விவகாரத்தில் வங்கிகளும் எங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இதுபோன்ற புகார் வந்தவுடனேயே அந்த வங்கிக் கணக்கை முடக்க நாங்கள் உத்தரவிடுகிறோம். ஆனால், நீதிமன்றம் உத்தரவிட்டால் மட்டுமே கணக்கை முடக்குவோம் என வங்கி ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். இதனால், குற்றச்செயலை தடுப்பதில் சைபர் கிரைமிற்கு தாமதம் ஏற்படுகிறது. இதுபோன்ற செயல்களை தவிர்க்க வேண்டும்'' என்றார்.