கோவையில் கடந்த சில நாட்களாக கஞ்சா விற்பனை அதிகரித்து வருகிறது. இதனடிப்படையில், காவல் துறையினரும் பலரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை, புலியகுளம் அடுத்த ரெட் ஃபீல்ட்ஸ் சாலையில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக இராமநாதபுர காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில், அப்பகுதிக்கு விரைந்த துணை காவல் ஆய்வாளர் அன்பரசன் தலைமையிலான தனிப்படை காவல் துறையினர் ரெட் ஃபீல்ட்ஸ் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றுகொண்டிருந்த இரண்டு வாலிபர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அந்த வாலிபர்கள் புலியகுளம் பகுதியைச் சேர்ந்த அந்தோனி (27) மற்றும் மனோஜ்குமார் (24) என்பது தெரியவந்துள்ளது. மேலும் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் அவர்களிடம் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து அவர்களை கைது செய்த காவல் துறையினர், அவர்களிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா மற்றும் 6 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.
இதனைத்தொடர்ந்து இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.