கோவை மாவட்டம், எட்டிமடையைச் சேர்ந்தவர் விவசாயி செல்லப்பகவுண்டர் (75). இவர் அப்பகுதியில் உள்ள தனது விவசாய நிலத்தில் ஒரு பகுதியில் தக்காளியினை பயிரிட்டுள்ளார். மற்றொரு பகுதி தரிசு நிலமாக விடப்பட்டிருந்துள்ளது. இதனை கடந்த மாதம் கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த முகமது இலியாஸ் (50) என்பவர் பிளாஸ்டிக் தரம் பிரிக்கும் நிறுவனம் அமைப்பதாகக் கூறி குத்தகைக்கு எடுத்துள்ளார். இதனை கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த ஷாஜியும், சதிரும் நிர்வகித்து வந்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து கடந்த ஒரு மாதமாக இரவு நேரங்களில் கேரளத்தில் இருந்து ஏராளமான மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரிகள் தொடர்ந்து வந்துள்ளன. மேலும், அப்பகுதி முழுவதும் கடுமையான துர்நாற்றமும் வீசியுள்ளது. இதனால் அப்பகுதி மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், திங்களன்று அதிகப்படியான மூட்டைகளை ஏற்றிக்கொண்டு அப்பகுதிக்கு வந்த 24 லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.
இதுகுறித்து தகவலறித்து அப்பகுதிக்கு வந்த மதுக்கரை வட்டாட்சியர் சிவசங்கர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த லாரிகளில் கேரள மாநிலத்திற்கு உரிய கதிர்வீச்சு அபாயம் நிறைந்த மருத்துவக் கழிவுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அப்பகுதியில் கொட்டிவைக்கப்பட்டிருந்ததும் மருத்துவக் கழிவுகள் என தெரியவந்தது. இதையடுத்து, அந்த லாரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில், இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வந்த கே.ஜி. சாவடி காவல் துறையினர் நில உரிமையாளர் செல்லப்ப கவுண்டர், முகமது இலியாஸ், ஷாஜி, சதிர் ஆகிய நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.