சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி சிறப்பு பஸ்கள் இன்று முதல் இயக்கப்படுகின்றன. 24-ந் தேதி வரை தமிழகம் முழுவதும் சுமார் 3 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
தீபாவளி சிறப்பு பஸ்கள்
தீபாவளி பண்டிகையையொட்டி, பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு எளிதாக பயணம் செய்யும் வகையில் 26-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை 3 நாட்களுக்கு சிறப்பு பஸ்கள் விடப்படுகின்றன. சென்னையில் இருந்து 2,275 வழக்கமான பஸ்களுடன் இன்று (புதன்கிழமை) கூடுதலாக 979 சிறப்பு பஸ்களும், நாளை 1,717 சிறப்பு பஸ்களும், 28-ந் தேதி 1,704 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளன. 3 நாட்களிலும் சிறப்பு பஸ்கள் உள்பட மொத்தம் 11,225 பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதேபோல பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு இன்று 2,507 சிறப்பு பஸ்களும், நாளை 3,488 சிறப்பு பஸ்களும், 28-ந் தேதி 4,069 சிறப்பு பஸ்கள் என மொத்தம் 10 ஆயிரத்து 64 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
தற்காலிக பஸ் நிலையங்கள்
கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து இன்று 2,233 பஸ்கள், 27-ந் தேதி 2,834 பஸ்கள், 28-ந் தேதி 2,821 பஸ்கள் என மொத்தம் 7,888 பஸ்கள் இயக்கப்படும். சென்னையில் புதிதாக 4 இடங்களில் உள்ள தற்காலிக பஸ் நிலையங்களில் இருந்து புறப்படும் பஸ்கள் விவரம் வருமாறு:-
அண்ணாநகரில் (மேற்கு) அமைக்கப்படும் தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து நாள் ஒன்றுக்கு 240 பஸ்கள் என 3 நாட்களில் மொத்தம் 720 பஸ்கள் இயக்கப்படும். கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு எதிரே உள்ள மாநில தேர்தல் ஆணைய பஸ் நிலையத்தில் இருந்து இன்று 186 பஸ்கள், நாளை 194 பஸ்கள், 28-ந் தேதி 194 பஸ்கள் என மொத்தம் 574 பஸ்கள் இயக்கப்படும்.தாம்பரம் சானடோரியம் அண்ணா பஸ் நிலையத்தில் (மெப்ஸ்) இருந்து இன்று 193, நாளை 230, 28-ந் தேதி 230 என மொத்தம் 653 பஸ்கள் இயக்கப்படும்.பூந்தமல்லி பஸ் நிலையத்தில் இருந்து இன்று 402, நாளை 494, 28-ந் தேதி 494 என மொத்தம் 1,390 பஸ்கள் இயக்கப்படும். தாம்பரம் மற்றும் பெருங்களத்தூர் பஸ் நிலையங்களில் இருந்து பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்த பயணிகள், ஊரப்பாக்கம் தற்காலிக பேருந்து நிலையத்துக்கு சென்று, அங்கிருந்து பஸ்களில் புறப்படலாம்.
இணைப்பு பஸ்கள்
இந்த 3 நாட்களில் சென்னையில் பல்வேறு பகுதிகளில் இருந்து தற்காலிக பஸ் நிலையங்களுக்கு பொதுமக்கள் சென்றுவர ஏதுவாக 200 மாநகர இணைப்பு பஸ்கள் இயக்கப்படும். இந்த 200 பஸ்களும் நகரின் வழக்கமான சேவை நேரத்தை தாண்டி செயல்படும். தேவை இருப்பின் 24 மணி நேரமும் தொடர்ந்து இந்த இணைப்பு பஸ்கள் இயக்கப்படும்.தீபாவளி பண்டிகை முடிந்து பொதுமக்கள் மீண்டும் ஊர் திரும்பும் வகையில் 30-ந் தேதி முதல் நவம்பர் 1-ந் தேதி வரை 3 நாட்களுக்கு அதே எண்ணிக்கையில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
3 லட்சம் பேர் முன்பதிவு
சிறப்பு பஸ்களுக்கான டிக்கெட் முன்பதிவு மும்முரமாக நடந்து வருகிறது. 24-ந் தேதி வரை சென்னையில் 69,880 பேரும், வெளி மாவட்டங்களில் ஒரு லட்சத்து ஆயிரத்து 634 பேரும் முன்பதிவு செய்துள்ளனர். அதேபோல தீபாவளி முடிந்து சென்னை திரும்புவதற்காக 54,583 பேரும், வெளிமாவட்டங்களில் 55,963 பேரும் முன்பதிவு செய்துள்ளனர்.300 கி.மீ. தூரத்துக்கு மேல் செல்லும் சிறப்பு பஸ்களில் பயணிக்க விரும்புவோர் www.tnstc.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்யலாம். கோயம்பேடு பஸ் நிலையத்தில் 26 முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல மெப்ஸ், பூந்தமல்லியில் உள்ள சிறப்பு முன்பதிவு மையங்கள் 28-ந் தேதி வரை செயல்படும். பஸ்களின் இயக்கம் குறித்து தகவல் அறியவும், புகார்கள் தெரிவிக்கவும் 044–24794709 என்ற எண்ணில் பயணிகள் தொடர்புகொள்ளலாம். இந்த தகவல்களை போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.