கோவை, பீளமேடு பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜன் (40). செவ்வாயன்று வேலைக்குச் செல்வதற்காக பீளமேட்டில் இருந்து பேருந்து ஏறியுள்ளார். ராதாகிருஷ்ணா மில் பேருந்து நிறுத்தம் அருகே பேருந்து வந்துகொண்டிருந்த போது கோவிந்தராஜின் அருகில் நின்றிருந்த வாலிபர் அவரது சட்டைப் பையில் இருந்து பணத்தை திருடிவிட்டு தப்பிக்க முயற்சித்துள்ளார். இதனையறிந்த கோவிந்தராஜன் கூச்சலிடவே பயணிகள் அந்த வாலிபரை பிடித்து சரமாரியாக தாக்கினர். இதனைத்தொடர்ந்து, பீளமேடு காவல் நிலையத்தில் அந்த வாலிபர் ஒப்படைக்கப்பட்டார்.
இதைத்தொடர்ந்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், அவர் உக்கடம் பகுதியைச் சேர்ந்த பாபு (40) என்பதும், இது போன்ற பல திருட்டுகளில் தொடர்பிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, அவர் மீது வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.