கோவை மாவட்டம், எட்டிமடையைச் சேர்ந்தவர் விவசாயி செல்லப்பகவுண்டர் (75). அப்பகுதியில் உள்ள இவரது விவசாய நிலத்தின் ஒரு பகுதியை கடந்த மாதம் கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த முகமது இலியாஸ் (50) என்பவர் பிளாஸ்டிக் தரம் பிரிக்கும் நிறுவனம் அமைப்பதாகக் கூறி குத்தகைக்கு எடுத்துள்ளார். இதனை கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த ஷாஜியும், சதிரும் நிர்வகித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் அப்பகுதி முழுவதும் கடந்த சில நாட்களாக கடுமையான துர்நாற்றம் வீசியுள்ளது. இதனிடையே திங்களன்று அதிகப்படியான மூட்டைகளை ஏற்றிக்கொண்டு அப்பகுதிக்கு வந்த 24 லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.
இதுகுறித்து தகவலறித்து அப்பகுதிக்கு வந்த மதுக்கரை வட்டாட்சியர் சிவசங்கர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த லாரிகளில் கேரள மாநிலத்திற்கு உரிய கதிர்வீச்சு அபாயம் நிறைந்த மருத்துவக் கழிவுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அப்பகுதியில் கொட்டிவைக்கப்பட்டிருந்ததும் மருத்துவக் கழிவுகள் என தெரியவந்தது. இதையடுத்து, அந்த லாரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். காவல் துறையினரும் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டனர்.


இந்நிலையில், இதுகுறித்தான விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இச்சம்பவத்திற்கு தொடர்புடைய முகமது இலியாஸ், ஹாஜி, சதிர் மற்றும் நில உரிமையாளர் ஆகியோரை நவம்பர் 11ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
மேலும், நீதிமன்றத்தின் உரிய உத்தரவு கிடைத்தவுடன் எட்டிமடை பகுதியில் கொட்டிவைக்கப்பட்டுள்ள கேரள மருத்துவக் கழிவுகளை அகற்ற அவர்களது வழக்கறிஞர் அருள்சக்திக்கு உத்தரவிடப்பட்டது.