கோவை மாவட்டம், பெரியதடாகம் அருகே அமைந்துள்ளது மாங்கரை வனப்பகுதி. இங்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு பெண் காட்டு யானை ஒன்று உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் கீழே விழுந்துகிடந்தது. இதனையறிந்த வனத்துறை மருத்துவர்கள் அந்த பெண் காட்டு யானைக்கு சிகிச்சை அளித்துவந்தனர்.
யானையின் உடல் நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில் மீண்டும் அப்பகுதியிலேயே உடல் நலமின்றி படுத்துக்கொண்டது. இதனைத்தொடர்ந்து கடந்த 21-ம் தேதியன்று அந்த யானையை வனத்துறையினர் லாரியின் மூலம் சாடிவயல் யானைகள் முகாமிற்குக் கொண்டுசென்று சிகிச்சை அளித்தனர். இதனிடையே, அந்தப் பெண் காட்டு யானை கடந்த 24-ம் தேதியன்று ஆண் குட்டி ஒன்றை ஈன்றது.
இதைத்தொடர்ந்து, யானைக்கும், யானை குட்டிக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததைத்தொடர்ந்து இரு யானைகளின் உடல்நலத்திலும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது.
எனவே, கும்கி யானைகளின் உதவியுடன் அந்த இரு யானைகளையும் காட்டிற்குள் அனுப்ப வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
வனத்துறையினரின் தொடர் சிகிச்சைக்குப் பின் காட்டு யானையின் உடல்நலம் முன்னேற்றமடைந்து தற்போது குட்டியுடன் காட்டிற்குள் செல்லும் நிகழ்வு வனத்துறையினர் மற்றும் வன ஆர்வலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.