திபாவளி பண்டிகைக் காலங்களில் அதிகப்படியானோர்க்கு பட்டாசுகள் மூலம் தீக்காயங்கள் ஏற்படுவது வழக்கம். இதுபோன்ற விபத்துகளை எவ்வாறு தவிர்ப்பது, தீக்காயத்தில் இருந்து எப்படி பாதுகாத்துக்கொள்வது என விவரிக்கிறார் கோவை கங்கா மருத்துவமனை பிளாஸ்டிக் சர்ஜரி ஆலோசகர் மற்றும் மருத்துவர் ரவீந்திர பாரதி.
இதுகுறித்து அவர் கூறியதாவது:- '' சாதாரணமாக பட்டாசுகள் வெடிக்கும் போது அதிகப்படியான விபத்துகள் ஏற்படுகின்றன. அந்த பட்டாசுகளில் உள்ள ரசாயன துகள்கள் கைகளில் நன்றாக ஒட்டிக் கொள்ளும் தன்மையுடையது. இது பல்வேறு விதமான பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியது. அதனை நாம் சுத்தமாக கழுவ வேண்டும். பட்டாசுகளை வெடிக்கும்போது கவனமாக இருத்தல் அவசியம். பட்டாசு வெடிப்பவரின் துணி அவரின் உடலுக்கு தகுந்ததாக இருக்க வேண்டும். பெரிய துணிகளை அணிந்துகொண்டு பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும். நீண்ட ஊதுபத்தியின் மூலம் பட்டாசுகளை பற்றவைப்பது நல்லது. வெடிக்காத பட்டாசுகளின் அருகில் சென்று பார்க்கவோ, அதனை மீண்டும் கையில் எடுக்கவோ கூடாது. அது நீண்ட நேரம் கழித்துக் கூட வெடிக்க வாய்ப்புள்ளது.
பெரும்பாலானோர் பட்டாசுகளை கைகளில் பற்றவைத்து வீசுவது வழக்கம். இதுபோன்ற செயல்களால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். கம்பி மத்தாப்பு, புஷ்வானம் உள்ளிட்ட பட்டாசுகள் வெடித்தபின் அதனை நீரில் போட்டுவிட வேண்டும். வெடிபொருட்களின் அருகிலேயே தண்ணீரையும் வைத்துக்கொள்ள வேண்டும். ஏதேனும் தீக்காயங்கள் ஏற்பட்டால் உடனடியாக நீரில் தீப்பட்ட இடத்தை நினைத்துவிட வேண்டும். இதன்மூலம், தீக்காயம் பெரிதாவது தடுக்கப்படும். தீக்காயத்தை நீரில் நனைத்தால் பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடும் என பலர் கருதுகின்றனர். அது முற்றிலும் தவறு. மேலும், சிலர் தீக்காயத்தின் மீது பேனா மை, மாவு உள்ளிட்டவற்றை தடவுவதை தவிர்க்க வேண்டும். தீ பட்ட இடத்தில் எரிச்சல் அடங்கும் வரை தண்ணீரிலேயே வைக்க வேண்டும். பின், மருத்துவரை சந்தித்து தகுந்த சிகிச்சை பெற வேண்டும். குழந்தைகள் பட்டாசு வெடிக்கும்போது பெரியவர்கள் உடன் நின்று கண்காணித்துக்கொள்ள வேண்டும். அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்''. இவ்வாறு அவர் பேசினார்.