தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில் நேற்றிரவு பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 30ம் தேதி துவங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது போன்றே நேற்று துவங்கியுள்ளது.
இந்நிலையில், கோவையில் நேற்று மாலை முதலே மழை பெய்தது. இரவில் இடி மின்னலுடன் கன மழை கொட்டி தீர்த்தது. கோவை மாவட்டத்தில் மொத்தமாக 413.90 மில்லி மீட்டர் பதிவாகி உள்ளது. கனமழையின் காரணமாக சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியதால் இருசக்கர வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.

மேலும், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. அவினாசி ரோட்டில் லட்சுமி மில் பகுதி அருகில் மழை வெள்ளம் குளம் போல் தேங்கி நின்றது. இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்பட்டனர். மேலும் அவினாசி மேம்பால சாலையில் மழை தண்ணீர் தேங்கியது. இன்று அதிகாலை வரை அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருந்தது. பின்னர் மாநகராட்சி ஊழியர்கள் விரைந்து வந்து ராட்சத மோட்டார் மூலம் தண்ணீரை இறைத்து வெளியேற்றினர். கோவை லங்கா கார்னர் பாலம், கோவை அரசு ஆஸ்பத்திரி போன்ற பகுதிகளில் தேங்கிய தண்ணீரை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
கோவை மாவட்டத்தில் துடியலூர், போத்தனூர், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், வால்பாறை, ஆனைமலை உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது. துடியலூர் அருகே வெள்ளக்கிணறு சமத்துவபுரத்தில் உள்ள 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்தது.
கோவை மாவட்டத்தில் இன்று காலை 8 மணி நிலவரப்படி பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
பொள்ளாச்சி - 110
பெரிய நாயக்கன் பாளையம் - 52
சூலூர் - 43
கோவை தெற்கு-37
வால்பாறை - 36
ஏர்போர்ட்-29.20
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம்-28.70
சின்ன கல்லார் - 18
மேட்டுப்பாளையம் - 11
சின்கோனா - 8
அன்னூர் - 4.