கோவை மாவட்டம், பெரிய தடாகம் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெண் காட்டு யானை ஒன்று உயிருக்கு போராடிக்கொண்டிருந்த நிலையில் வனத்துறை மருத்துவர்கள் அதற்கு தீவிர சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து சாடிவயல் யானைகள் முகாமிற்கு அழைத்துச் சென்று அந்த யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் ஒரு ஆண் குட்டியை அது ஈன்றது.
தொடர்ந்து தாய் மற்றும் குட்டி யானைக்கு சிகிச்சை அளித்து வந்த வனத்துறை மருத்துவர்கள் அதனை வனப்பகுதிக்குள் விட்டனர்.
இதனைத்தொடர்ந்து அந்த இரு யானைகளையும் தொடர்ந்து வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். தற்போது அந்த யானைகள் போரதி, முள்ளான்காடு வனப்பகுதியில் சுற்றிவருகிறது. பெண் காட்டு யானை தற்போது, வனத்தின் சூழலுக்கு ஏற்றாற்போல் தன் குட்டியை பராமறித்து வருகிறது. ஓரிரு நாட்களில் மற்ற யானைக் கூட்டத்துடன் இணைந்துவிடும். இன்னும் இரண்டு முதல் மூன்று வாரங்களுக்கு அந்த தாய் மற்றும் குட்டி யானை வனத்துறையினரின் கண்காணிப்பிலேயே இருக்கும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.