கேரள மாநிலம் ஆலப்புழா பகுதியில் பறவை காய்ச்சல் நோய் பரவி உள்ளதை தொடர்ந்து, தமிழகத்தில் பறவை காய்ச்சல் பரவுவதை தடுக்க கால்நடை பராமரிப்பு துறை அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
கோவை மாவட்டத்தில் வாளையாறு, வேலாந்தவளம், ஆனைக்கட்டி உள்ளிட்ட 12 பகுதிகளில் பறவை காய்ச்சல் நோய் தடுப்பு சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. கேரள மாநிலத்தில் இருந்து வரும் அனைத்து வாகனங்களுக்கும் கிருமி நாசினி மருந்து தெளித்த பின்னரே தமிழகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படுகின்றன. மேலும் கேரள மாநிலத்த்தில் இருந்து வாத்து, கோழி, முட்டை உள்ளிட்டவை ஏற்றி வரும் வாகனங்கள்திருப்பி அனுப்பப்படுகின்றன.
கோவை கோட்டத்தில் 5 சோதனைச்சவடிகளும், பொள்ளாச்சி கோட்டத்தில் 7 சோதனைச்சாவடிகளும் அமைக்கப்பட்டு உள்ளதாகவும், பறவை காய்ச்சல் பரவுவதை தடுக்க கால்நடை பராமரிப்பு துறையினர் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குநர் தமிழ்செல்வன் தெரிவித்தார். மேலும் அனைத்து சோதனைச்சாவடிகளிலும் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், மருந்துகள் தேவையான அளவு கையிருப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
கோவை மாவட்டத்தில் உள்ள கோழிப்பண்ணைகளை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும், நோய் தாக்கத்திற்கான அறிகுறிகள் தென்பட்டால் கால்நடை பராமரிப்பு துறையினருக்கு தெரியப்படுத்துமாறு அறிவுறுத்தி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.