கோவை மாவட்டம், குனியமுத்தூர் பகுதியை அடுத்த தம்பிக்கவுண்டர் தோட்டப் பகுதியில் செவ்வாயன்று மர்மநபர் ஒருவர் சந்தன மரத்தினை வெட்டி கடந்த முயற்சித்துள்ளார். அவரைப் பிடித்த பொதுமக்கள் குனியமுத்தூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதனைத்தொடர்ந்து அவரிடம் காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் அவரது பெயர் ராமசாமி (23) என்பது தெரியவந்துள்ளது. மேலும், அவருடன் சந்தன மரக்கடத்தலில் நாகராஜ் என்பவரும் தொடர்பு வைத்திருப்பது தெரியவந்துள்ளது.
இதைத்தொடர்ந்து நாகராஜின் வீட்டிற்கு சென்ற காவல் துறையினர் அங்கு பதுக்கிவைத்திருந்த இரு பெரிய சந்தன மரக்கட்டைகளை கைப்பற்றினர். பின், இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
முன்னதாக, ராமசாமி மற்றும் நாகராஜ் ஆகிய இருவரும் ஏற்கனவே கோவைப்புதூர் பகுதியில் சந்தன மரக் கடத்தலில் ஈடுபட்டு தேடப்பட்டு வந்த குற்றவாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.