கோவை மாவட்ட மாநகராட்சிக்கு உட்பட்ட சுண்டப்பாளையம் சாலை, குமாரசாமி காலனியில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக பொது கழிப்பிடக் கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதனை மாநகராட்சி ஆணையர் க.விஜயகார்த்திகேயன் புதனன்று நேரில் சென்று ஆய்வில் ஈடுபட்டார். இதனைத்தொடர்ந்து, 22 வது வார்டுக்குட்பட்ட சாய்பாபா காலனி பகுதியில் வசிக்கும் வீடுகளுக்கு செல்லும் மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை பிரித்தெடுக்கும் பணிகளில் ஈடுபடுவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதனைத்தொடர்ந்து, தடாகம் சாலையில் அமைந்துள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரி அருகில் துப்புரவுப் பணியாளர்கள் மேற்கொள்ளும் பணிகளையும், குப்பைத்தொட்டிகளை பராமறிப்பது குறித்தும் அவர் பார்வையிட்டார்.
இதையடுத்து கோவையில் சில காலமாக டெங்கு காய்ச்சல் பரவி வருவதைத் தொடர்ந்து, மாநகராட்சி கொசு ஒழிப்பு பணியாளர்கள் மேற்கொள்ளும் பணிகளை ஆய்வு செய்தார். இதில், ஆர்.எஸ்.புரம், கௌலிபிரவுன் சாலை, தமிழ்நாடு அரசு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் மாநகராட்சி கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று அபேட் மருந்தை தொட்டிகளில் ஊற்றுவதையும், தேவையில்லாத பொருட்களை அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வருவதையும் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலரான க.விஜயகார்த்திகேயன் ஆய்வு செய்தார்.
இந்நிகழ்வுகளின் போது துணை ஆணையர் ப.காந்திமதி, மாநகராட்சி நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், மேற்கு மண்டல உதவி ஆணையர் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.