கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர் சரத்சந்திரபாபு. இவரது மகன் சந்திரதாஸ் (22). கோவை மாவட்டம் சூலூரிலுள்ள சப்தகிரி நகர் பகுதியில் அறையெடுத்து தங்கி அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.இ. இறுதியாண்டு படித்து வருகிறார். இவருடன் அறையில் மொத்தம் 3 பேர் தங்கியுள்ளனர்.
இந்நிலையில், புதனன்று சந்திரதாஸ் உள்ளிட்ட அனைவரும் வெளியில் சென்றுவிட்டு அறைக்கு திரும்பியுள்ளனர். அப்போது அறையில் 4 பேர் கொண்ட கும்பல் மடிக்கணினி உள்ளிட்ட பொருட்களை திருடிக்கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. உடனடியாக அவர்களைப் பிடித்து சூலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதனைத்தொடர்ந்து காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் சூலூர் பகுதியைச் சேர்ந்த முத்துகுமார் (21), ஜெயசுந்தர் (21), பரதன், சுபாஷ் என்பதும், அதேக்கல்லூரியில் பி.இ. இறுதியாண்டு படித்து வருவதும் தெரியவந்துள்ளது. அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த காவலர்கள், நான்குபேரையும் சிறையில் அடைத்தனர்.