வால்பாறைக்கு உட்பட்ட சின்கோனா, சிறுகுன்றா, நல்லமுடி, பன்னிமேடு மற்றும் பல்வேறு எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகள் அவ்வப்போது அடர்ந்த வனப்பகுதியில் இருந்து மக்கள் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து வீடுகள், பள்ளிக் கூடம், சத்துணவுக் கூடம், ரேசன் கடை உள்ளிட்டவற்றை இரவு நேரங்களில் சேதப்படுத்துவது வழக்கம். ஆனால், சில காலமாக பகல் நேரங்களில் தேயிலைத் தோட்டங்களில் யானைகள் முகாமிடுவது வழக்கமாகி வருகிறது.
இந்நிலையில், புதனன்று கேரள மாநில எல்லையான வாகமலை எஸ்டேட் பகுதியில் 10க்கும் மேற்பட்ட யானைகள் தேயிலைத் தோட்டத்தில் முகாமிட்டு இருந்தன. அதில் ஒரு யானை இரவு நேரத்தில் குட்டியிட்டு தேயிலைத் தோட்டத்தில் சுற்றித் திரிந்தது. இதுகுறித்து, அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து சம்பவ இடத்திற்கு வனத்துறையினர் விரைந்து வந்து யானைகளின் நடவடிக்கை குறித்து கண்காணித்து வருகின்றனர்.
இந்த தாய் யானையானது குட்டியிட்டு ஒன்று அல்லது இரண்டு நாட்கள் தான் ஆகியிருக்கும் எனவே பொது மக்கள் யாரும் அதன் அருகே சென்று தொந்தரவு செய்ய வேண்டாம் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.