கோவை மாநகராட்சியில் கட்டிட கழிவுகளை அகற்றுவதற்கான உதவி சேவை மையத்தையும், அதற்கு பயன்படுத்தக்கூடிய கட்டிட கழிவுகளை அகற்றும் வாகனங்களையும் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலரான க.விஜயகார்த்திகேயன் துவக்கி வைத்தார்.
இதுகுறித்து, க.விஜயகார்த்திகேயன் தெரிவிக்கையில், ''தமிழக முதல்வர் 110 விதியின் கீழ் அறிவித்த சிறப்பு திட்டங்களில் ஒன்றான கட்டிட கழிவுகளை மறுசுழற்சி முறையில் பயன்படுத்தும் திட்டம் இதுவாகும். இதனை செயல்படுத்தும் விதமாக கோவை மாநகராட்சியில் கட்டிட கழிவுகளை அகற்றுவதற்கான உதவி சேவை மையம் 8190000400 என்ற தொலைபேசி எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும், கட்டிட கழிவுகளை அகற்றும் பணிகளில் 3 வாகனங்கள் துவங்கி வைக்கப்பட்டது.
குறிப்பாக பொதுமக்கள் வீடுகள் கட்டும் பொழுதும், வீடுகள், கட்டிடங்களை இடிக்கும் போதும் கட்டிட கழிவுகள் ஆங்காங்கே கொட்டப்படுகின்றன. இதை தவிர்ப்பதற்காகவே இத்திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற கட்டிடக் கழிவுகள் இருக்கும் பட்சத்தில் பொதுமக்கள் இந்த 8190000400 எண்ணிற்கு தொடர்புகொண்டு பயன்படுத்திக் கொள்ளலாம். இக்கட்டிட கழிவுகளைக் கொண்டு மறுசுழற்சியாக செங்கற்கள், பேவர் பிளாக்ஸ் மற்றும் எம்-சேன்ட் போன்றவற்றை தயார் செய்வதற்காக இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது'' என்றார்.
இந்நிகழ்ச்சியில் துணை ஆணையர் ப.காந்திமதி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.