மேற்குத் தொடர்ச்சி மலையினை இயற்கை மாறாமல் பாதுகாப்பது குறித்து வரும் 6ம் தேதியன்று கலந்துரையாடல் நடைபெறவுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மேற்கு மலைத்தொடர் பாதுகாப்பு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஓசை தன்னார்வ அமைப்பினருமான க.காளிதாசன் கூறியிருப்பதாவது:-
நமது வாழ்வாதாரமான மேற்கு மலைத்தொடர் பாதுகாப்பை வலியுறுத்தி ஆறு மாநிலங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பாக பல ஆண்டுகளாக நடைபெற்றுவரும் தொடர் செயல்பாடுகளை நாம் அறிவோம். அதன் விளைவாக அமைக்கப்பட்ட மாதவ் காட்கில் குழு, கஸ்தூரிரங்கன் குழு ஆகியவற்றின் பரிந்துரைகள் நமது அரசுகளால் கவனிக்கப்படாது புறந்தள்ளப்பட்டுள்ளன.
இச்சூழலில் நாம் அடுத்து செய்யவேண்டியது குறித்தும், பிப்ரவரி 2017ல் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள மேற்கு மலை பாதுகாப்பு கூட்டமைப்பின் சந்திப்புப் பற்றியும் கலந்துரையாட இம்மலை பாதுகாப்பு இயக்கத்தின் முன்னோடிகளான குமார் கலானந்த் மணி, பாண்டுரங்க ஹெக்டே ஆகியோர் வரும் நவம்பவர் 6ம் தேதியன்று (ஞாயிறு) கோவைக்கு வருகைதர உள்ளனர்.
அன்றைய தினம், காலை 10.30 மணியளவில் கிரே டவுன், நேரு விளையாட்டரங்கம் அருகில் அமைந்துள்ள ஜி.டி.நர்சரி பள்ளி வளாகத்தில் கலந்துரையாடல் நடைபெறவுள்ளது. இதில் பெருந்திரளானோர் பங்கேற்று நமது மலையின் பாதுகாப்பிற்கான தங்களின் கருத்துக்களை பதிவு செய்ய அன்புடன் அழைக்கிறோம். மேற்கு மலைத்தொடரை பாதுகாக்காமல் நம் எதிர்காலம் இல்லை என்பதை நாம் இணைந்து வலியுறுத்துவோம், மேலும் தகவலுக்கு 9443022655 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.