தமிழக அரசின் சார்பில் மலிவு விலையில் விநியோகம் செய்யப்படும் ரேஷன் அரிசிகள் அவ்வப்போது வெளிமாநிலங்களுக்கு கடத்தப்படுவது வழக்கம். அதனைக் கட்டுப்படுத்தும் வகையில் கடத்தல் பிரிவு காவல் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பொள்ளாச்சி வழியாக கேரளாவிற்கு லாரி மூலம் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில், ராமபட்டினம் சோதனை சாவடியில் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவலர்கள் சோதனையில் ஈடுபட்டிருந்த நிலையில், அந்த வழியாக வந்த லாரியை பிடித்து அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது லாரியில் வந்த இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதனைத்தொடர்ந்து லாரியில் சோதனையிட்டபோது அதில் 10 டன் ரேஷன் அரிசி கடத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
லாரியை கைப்பற்றிய காவல் துறையினர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.