கோவையில் முறையான அங்கீகாரம் இன்றி செயல்பட்டு வரும் ஈஷா வித்யா குருகுல பள்ளி நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கலந்து கொண்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.
கோவையை அடுத்த வெள்ளிங்கிரி மலையடிவார பகுதியில் உள்ள ஈஷா வித்யா குருகுல உறைவிட பள்ளி முறையான அனுமதி மற்றும் அங்கீகாரம் இன்றி செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அப்பள்ளியின் பத்தாம் ஆண்டு நிறைவு விழாவை ஒட்டி நடத்தப்படும் தேசிய கல்வி மாநாட்டில், மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கலந்து கொண்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் மாநில குழு உறுப்பினரும், முன்னாள் மக்களவை உறுப்பினருமான பி.ஆர்.நடராசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈஷா வித்யா பள்ளியில் உரிய அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை எனவும், முறையான அங்கீகாரம் இன்றி செயல்பட்டு வருவதாக எழுந்த புகாரின் பேரில், கடந்த ஜீன் மாதம் தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் நல பாதுகாப்பு ஆணைய உறுப்பினர்கள் ஆய்வு நடத்த சென்ற போது பள்ளி வளாகத்திற்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதாவும், பள்ளி அங்கீகாரம் தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மாநில அரசு துறை நிறுவனமான குழந்தைகள் நல ஆணையத்தையே ஆய்வு செய்ய விடாமல் தடுத்திட்ட ஈஷா பள்ளி நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் தவிர்த்திருக்க வேண்டுமெனவும், இது சட்டத்தை மதிக்காத ஈஷா நிர்வாகத்திற்கு உதவி செய்வது போல் ஆகிவிடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் அங்கீகாரமோ, பள்ளி நடத்த அனுமதி பெறாத பள்ளிகள் நடத்தும் நிகழ்ச்சிகளில் மத்திய அமைச்சர்கள் பங்கேற்பது அவர்களை ஊக்குவிப்பது போல் ஆகிவிடும் எனவும், இதர கல்வி நிறுவனங்களும் முறைகேடுகளில் ஈடுபட வழிவகுக்கும் எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். மாநில அரசுகளின் அனுமதி மற்றும் அங்கீகாரம் பெறாத பள்ளி நிகழ்ச்சிகளில் மத்திய அமைச்சர்கள் பங்கேற்பதற்கு தடை விதிக்க வேண்டுமெனவும், மத்திய அமைச்சர் பிரகாச்ஜ் ஜவடேகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் பி.ஆர்.நடராசன் வலியுறுத்தியுள்ளார்.