கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடைபெற்ற குரூப்- 4 தேர்வினை ஞாயிறன்று மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அரசு பணியாளர் தேர்வாணையம் பல்வேறு போட்டித் தேர்வுகளை நடத்தி வருகின்றது. அதன்படி, ஞாயிறன்று (இன்று) தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் குரூப்- 4 தேர்வு நடைபெற்றது. இத்தேர்வு மையங்களில் மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இதனைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில்,
''குரூப்- 4 தேர்வெழுத கோவை மாவட்டத்தில் மட்டும் 50 ஆயிரத்து 863 பேர் விண்ணப்பித்திருந்தனர். ஞாயிறன்று (இன்று) 123 மையங்களில் நடைபெற்ற அத்தேர்வில் 36 ஆயிரத்து 964 பேர் தேர்வெழுதினர். இத்தேர்வினை கண்கானிக்க 70 மொபைல் யூனிட்களும், 26 பறக்கும் படை குழுவும், 179 அறை கண்கானிப்பாளர்களும் கண்கானிப்பு பணியினை மேற்கொண்டனர்.
இதில், முறைகேடுகள் ஏதும் ஏற்படாத வகையில் தேர்வு நடைபெற்றது. மேலும், அனைத்து மையங்களையும் கண்கானிக்க வீடியோ ஒளிப்பதிவு செய்யப்பட்டது. இத்தேர்வு சிறப்பாக நடைபெற பணியாற்றிய அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்'' என ஆட்சியர் தெரிவித்தார்.