ஜெயலலிதா எழுந்து உட்காருவதற்கு பயிற்சி விரைவான முன்னேற்றம் கண்டு டாக்டர்கள் மகிழ்ச்சி

சென்னை, முதல்-அமைச்சர் ஜெயலலிதா எழுந்து உட்காருவதற்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலையில் விரைவான முன்னேற்றம் கண்டு டாக்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஜெயலலிதாவுக்கு சிகிச்சை

உடல்நல குறைவால் பாதிக்கப்பட்ட முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22-ந் தேதி சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். நேற்று 45-வது நாளாக அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

தற்போது, முதல்-அமைச்சர் ஜெயலலிதா தனக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து டாக்டர்களிடம் கேட்டு அறிகிறார். தனக்கு என்ன வேண்டும் என்பதையும் அவரே கேட்டு வாங்கி சாப்பிடுகிறார். அவருக்கு ‘டிரக்கியாஸ்டமி’ சிகிச்சை முறையில் அளிக்கப்படும் செயற்கை சுவாசம் விரைவில் நிறுத்தப்பட்டு, இயற்கையாக சுவாசம் மேற்கொள்ள இருக்கிறார். அதற்கான பயிற்சியினை அவருக்கு டாக்டர்கள் அளித்து வருகின்றனர்.

நரேந்திர மோடி வருவார்

எனவே, இன்னும் சில நாட்களில் அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட இருக்கிறார். நேற்று முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு எழுந்து உட்காருவதற்கு பயிற்சி அளிக்கப்பட்டது. அவரது உடல்நிலையில் விரைவான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை கண்டு டாக்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். எனவே, இன்னும் சில வாரங்களில் அவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே, முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல்நலம் குறித்து விசாரிப்பதற்காக, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி, பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய மந்திரிகள் அருண் ஜெட்லி, வெங்கையா நாயுடு மற்றும் அண்டை மாநில முதல்-மந்திரிகள் என பல முக்கிய பிரமுகர்கள் அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு வந்து சென்றுள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடியும் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து விசாரிக்க வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்போது அவர் வரவில்லை. எனவே, ஜெயலலிதா சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டவுடன் பிரதமர் நரேந்திர மோடி அவரை சந்தித்து உடல்நலம் விசாரிக்க வருவார் என தெரிகிறது.

நேற்றும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து விசாரிப்பதற்காக சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு பலர் வந்தனர்.

மதுரை ஆதீனம் அருண கிரிநாதர், தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க முன்னாள் தலைவர் கேயார், இசையமைப்பாளர் சங்கர் கணேஷ், நடிகை ஆர்த்தி, அகில இந்திய கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு குழு தலைவர் ஆர்.டி.பழனி, அகில இந்திய மக்கள் கழக நிறுவன தலைவர் ஏ.அஸ்மத்துல்லா உள்ளிட்டோர் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து விசாரித்து சென்றனர்.

சி.ஆர்.சரஸ்வதி

அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி நிருபர்களிடம் கூறியதாவது:-

இன்று எங்களின் சந்தோஷத்துக்கு அளவே கிடையாது. அப்பல்லோ மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் பி.சி.ரெட்டி செய்தியாளர் களை சந்தித்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா நல்ல உடல்நலம் தேறிவிட்டார். அவர் தன்னுடைய வழக்கமான பணிகளை செய்ய தொடங்கிவிட்டார் என்று சொன்னபோது எங்களுடைய மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. எங்களுடைய மனமார்ந்த நன்றிகளை எல்லாம் வல்ல இறைவனுக்கு காணிக்கையாக்குகிறோம்.

உலகத்தில் உள்ள அத்தனை மக்களின் பிரார்த்தனை, கட்சி மகளிரணி பிரார்த்தனை, அனைத்து மதத்தை சேர்ந்த மக்களின் பிரார்த்தனையும் நல்ல பலனை கொடுத்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல்நிலையை குணம் அடைய செய்து இருக்கிறது. இதைவிட சந்தோஷம் எங்களுக்கு வேறு ஒன்றும் இல்லை. மிகவிரைவில் மக்கள் பணிகளை தொடங்குவதற்கு ஜெயலலிதா தயாராக உள்ளார். எப்போது வீட்டுக்கு போய் எப்போது மக்கள் பணிகளை தொடங்கலாம் என்ற எண்ணம், சிந்தனை தான் அவரிடம் உள்ளது என்று பி.சி.ரெட்டியே கூறிஉள் ளார். இந்த நேரத்தில் எல்லா வல்ல இறைவனுக்கும், அனைத்து டாக்டர்களுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அருணகிரிநாதர்

மதுரை ஆதீனம் அருண கிரிநாதர் நிருபர்களிடம் கூறியதாவது:-

இன்றைய தினம் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, டாக்டர்களிடம் உரையாடி கொண்டு இருந்த போது நல்ல ஒரு செய்தியை எங்களிடம் தெரிவித்தார்.

அந்த செய்தியானது, மிகச்சில நாட்களிலேயே இன்னும் சொல்லப்போனால் 10 நாட்களில் ஜெயலலிதா போயஸ் தோட்டத்துக்கு திரும்பிவிடலாம் என்ற நல்ல செய்தியை நமக்கு தந்து இருக்கிறார்கள். எல்லோருக்கும் மகிழ்ச்சியான செய்தி. மீண்டும் ஜெயலலிதா முழு உடல்நலம் பெற்று நல்ல ஆட்சியை நம் மக்களுக்கான நல்ல பல திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்துவார் என்பதிலே எந்த விதமான ஐயமும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

சங்கர் கணேஷ்

இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் நிருபர்களிடம் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை நன்றாக இருக்கிறது. விரைவில் வீடு திரும்புவார் என்று சொன்னார்கள். இதை கேட்கவே மகிழ்ச்சியாக உள்ளது.

மருத்துவமனையில் விசாரித்த போது ஜெயலலிதா சிரித்த முகத்தோடு இருப்பதாக தெரிவித்தார்கள். இதைவிட வேறு என்ன மகிழ்ச்சி வேண்டும். முதல்-அமைச்சர் ஜெயலலிதா சீக்கிரம் வந்துவிடுவார். இந்த நற்செய்தியை சொல்லவே நான் வந்தேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

பிரார்த்தனை

முதல்-அமைச்சர் ஜெயலலிதா பூரண நலம்பெற வேண்டி நேற்றும் பிரார்த்தனைகள் நடைபெற்றன. அ.தி.மு.க. மகளிரணி சார்பில் கந்தசஷ்டி பூஜையும், லிங்க பைரவர் பூஜையும் நடைபெற்றது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...