ரோட்டரி கிளப் கோவை மற்றும் கோவை மாவட்ட விளையாட்டு நலச்சங்கம் இணைந்து பள்ளி மாணவ, மாணவியர்களிடையே விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு கலைத் திறனை மேம்படுத்தும் விதமாக சனி மற்றும் ஞாயிறு (இன்று) ஆகிய இருதினங்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

கோவை அசோகபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்சியில் கோவை மாவட்டத்தில் இருந்து 32 அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளிலிருந்து மொத்தம் 380க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

இதில், திருக்குறல் ஒப்புவித்தல், கிராமிய நடனம், கர்நாட்டிக் நடனம், பரதநாட்டியம், யோகா, கர்மவீரர் காமராஜரை பற்றிய பேச்சுப்போட்டி, நாடகம், கரகம் மற்றும் காவடி நடனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.


இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ரோட்டரி கிளப்பின் கோவை மாவட்ட துணை அளுநர் கே.ஆர்.பாண்டியன் இதுகுறித்து பேசிய போது :-
''பள்ளி மாணவ, மாணவிகள் கல்வி, மதிப்பெண் குறித்த சிந்தனையை மட்டுமே கொண்டு செயல்படுகின்றனர். அவர்களின் கூடுதல் திறமைகளை வெளிப்படுத்தவே இந்த கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதன் மூலம், அவர்களின் திறமையை நன்றாக வெளிப்படுத்தவும், அதிகரிக்கவும் முடிந்தது. மாணவ, மாணவிகளின் இத்தகைய திறமைகள் வெறும் விளையாட்டாக மட்டும் அல்லாமல், அவர்கள் பிற்காலத்தில் கல்லூரி சேர்க்கையின் போதும் சலுகைகளைப் பெற பயன்படும். இதில் பங்கேற்ற அனைத்து மாணவர்களும் தங்களின் கலைத் திறனை சிறப்பாக வெளிப்படுத்தினர். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பெரும்பாலான பெற்றோர்கள் கலந்துகொள்ள வாய்ப்பில்லை என நினைத்தோம் . ஆனால், 400க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் இன்று இந்நிகழ்ச்சியில் பங்கேற்றது மகிழ்ச்சியளிக்கிறது'' என்றார்.

இதில் கலந்து கொண்ட பள்ளி மாணவ மாணவியரை ஊக்குவிக்கும் வகையில் பரிசு பொருட்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், ரோட்டரி கிளப்பின் கோவையின் தலைவர் குர்ப்ரீத் சிங், செயலாளர் ஏ.ராம்குமார், இளைஞர் அமைப்பு இயக்குநர் ராஜேஷ் போரா, திட்டத் தலைவர் பிரபாகர், கோவை மாவட்ட விளையாட்டு நலச் சங்கத்தின் சார்பில் தலைவர் ராமச்சந்திரன், துணைத் தலைவர் பிரின்ஸ், ஒருங்கிணைப்பாளர் கனேசன், செயலாளர் ஓ.சன்முகசுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.