கோவை அருகே உள்ள இடையர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் துரைசாமி. இவரது மகன் சௌந்தரராஜன் (28). அப்பகுதியில் உள்ள மில் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இவருக்கு எச்ஐவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு கோவை அரசு பொது மருத்துவமனையில் சௌந்தரராஜன் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், கடந்த 4ம் தேதி முதல் அவர் காணாமல் போயுள்ளார். அவரை குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனிடையே ஞாயிறன்று சூலூர் அருகே உள்ள கல்லுக்குழியின் அருகே இவரது குடும்பத்தினர் தேடியுள்ளனர். அப்போது கல்லுக்குழியில் விழுந்து சௌந்தரராஜன் தற்கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த சூலூர் காவல் துறையினர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.