தமிழகத்தில் பறவைக் காய்ச்சல் பரவுவதை தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும், கேரளாவில் பறவைக் காய்ச்சல் ஒழிக்கப்பட்டது என அறிவிக்கும் வரை தொடர்ந்து தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் கமலேஷ் தனப்பன் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் ஆலப்புழா பகுதியில் பறவைக் காய்ச்சல் பரவியுள்ளது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, தமிழகத்தில் பறவைக் காய்ச்சல் பரவுவதை தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக கோவை மாவட்டத்தில் வாளையாறு, வேலாந்தாவளம், ஆனைகட்டி உள்ளிட்ட 12 பகுதிகளில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு கேரளாவில் இருந்து வரும் அனைத்து வாகனங்களுக்கும் கிருமி நாசினி மருந்து தெளித்த பின்னரே, தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றன.
மேலும், பறவைக் காய்ச்சல் பரவுவதை தடுக்க கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகள் தொடர் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே கோவை வாளையாறு பகுதியில் உள்ள பறவைக் காய்ச்சல் தடுப்பு சோதனைச் சாவடியில் கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் கமலேஷ் தனப்பன் ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-
''பறவைக் காய்ச்சல் பரவுவதை தடுக்க கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள 6 மாவட்டங்களில் 26 சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு, 24 மணி நேரமும் பணியாற்றும் வகையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் பறவை காய்ச்சல் முழுமையாக ஒழிக்கப்பட்டுவிட்டது என அறிவிக்கும் வரை இப்பணிகள் தொடர்ந்து நடைபெறும். கேரளாவில் இருந்து வரும் வாத்து, கோழி, முட்டை உள்ளிட்ட பொருட்கள் திருப்பி அனுப்பப்பட்டு வருகிறது. மேலும், பறவைக் காய்ச்சல் கிருமியினால் மனிதனுக்கு தொற்று நோய் ஏற்பட வாய்ப்பில்லை என்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. கோழிப்பண்ணை, பறவைகள் சரணாலயம், உயிரியல் பூங்காக்களில் கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், அங்கு அதிகப்படியான பறவைகள் இறப்புகள் இருந்தால் கால்நடை பராமரிப்புத் துறையினருக்கு உடனடியாக தெரியப்படுத்த வேண்டும். இறந்த பறவைகளை பரிசோதனைக்கு உட்படுத்தி நடவடிக்கை எடுக்கப்படும்'' என தெரிவித்தார்.