ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் ஸ்ரீ சக்தி ஈமு பார்ம்ஸ் எனும் நிறுவனம் இயங்கி வந்தது. இதனை பெருந்துறை அருகே உள்ள கருமாண்டி செல்லிப்பாளையம் அண்ணாநகரைச் சேர்ந்த செந்தில்குமார் (42), கணேசன் (32) ஆகியோர் நிர்வகித்து வந்தனர். இங்கு தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த வெள்ளைச்சாமி (63) உட்பட 5 பேர், பல்வேறு திட்டங்களின் கீழ் ரூ.12 லட்சம் வரையில் முதலீடு செய்தனர். இந்நிலையில், முதிர்வுத் தொகை முடிந்த பின்பும் அந்த பணம் வட்டியுடன் முதலீட்டாளர்களுக்கு திருப்பித் தரப்படவில்லை. இதுகுறித்து பலமுறை முதலீட்டாளர்கள் உரிமையாளர்களிடம் கேட்டும் உரிய பதில் கூறவில்லை.
இந்நிலையில், கடந்த 2012ம் ஆண்டு ஜூன் 8ம் தேதியன்று ஈமு மோசடி குறித்து வெள்ளைச்சாமி என்பவர் பெருந்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, இந்த வழக்கு ஈரோடு மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினருக்கு மாற்றப்பட்டது. இதில், ஏமாற்றுதல் (420-பி), தமிழ்நாடு முதலீட்டாளர் நலன் சட்டப்பிரிவு 5 (1) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இதைத்தொடர்ந்து, ஈமு பார்ம்ஸ் உரிமையாளர்களான செந்தில்குமார், கணேசன் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கு கோவை டான்பிட் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் அரசுத் தரப்பில் இருந்து 19 பேரிடம் சாட்சியம் பெறப்பட்டது.
இந்நிலையில், நீதிபதி பாபு முன்னிலையில் வழக்கின் இறுதி விசாரணை நடந்தது. அரசுத் தரப்பில் வழக்கறிஞர்கள் தங்கராஜ், மாணிக்கராஜ் ஆகியோர் ஆஜராகினர். இதில், செந்தில்குமார் மற்றும் கணேசன் ஆகிய இருவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இருவருக்கும் தலா 5 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.12 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும், அபராதத் தொகையில் ரூ.11 லட்சத்தை பாதிக்கப்பட்ட 5 பேருக்கு பிரித்து வழங்க வேண்டும், மீதமுள்ள ரூ.1 லட்சத்தை அரசுக்கு செலுத்த வேண்டும் எனவும் தீர்ப்பில் தெரிவித்தார்.