கோவை மாநகராட்சி பிரதான அலுவலகக் கூட்டரங்கில் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலரான க.விஜயகார்த்திகேயன் தலைமையில் மாநகராட்சி சாலைகள் பழுது சரி செய்த சில மாதங்களில் மீண்டும் சேதப்படுத்தப்படுவதைத் தடுக்கும் விதமாக ஒருங்கிணைந்த முறையில் பணிகளை செய்து முடிப்பது குறித்து பி.எஸ்என்.எல் மற்றும் தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் வியாழனன்று (இன்று) நடைபெற்றது.
இதுகுறித்து க.விஜயகார்த்திகேயன் தெரிவிக்கையில், ''கோவை மாநகராட்சியில் சாலைகள் பழுது சரி செய்த சில மாதங்களில் பி.எஸ்என்.எல் துறையின் மூலம் கண்ணாடி இறைவடம் மற்றும் தமிழ்நாடு மின்சார வாரியத் துறையின் மூலம் மின்சார வடங்கள் பூமிக்கடியில் கொண்டு செல்வதற்காக ஆங்காங்கே குழிகள் தோண்டப்பட்டு ஒருங்கிணைந்து சில சமயங்களில் மக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. இதைத் தவிர்த்திடும் வகையில் ஒருங்கிணைந்த முறையில் பணிகளை செய்து முடிப்பது குறித்து பி.எஸ்.என்.எல் மற்றும் தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலர்களுடன் ஆலோசனை நடைபெற்றது.
மேலும், மாநகராட்சியில் சாலைப் பணிகள் நடைபெறும் இடங்கள், பணிகள் குறித்த விவரங்கள் மாநகராட்சியின் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை தெரிந்துகொண்டு பி.எஸ்என்.எல் மற்றும் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பணிகள் அட்டவணைப் படுத்தப்பட்டு மாநகராட்சி அலுவலர்களுடன் தொடர்பு கொண்டு ஒருங்கிணைந்த முறையில் சாலைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு எந்தவித பழுதும் இல்லாமல் சாலைகள் பராமரிக்கப்படும்''.
இவ்வாறு மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், துணை ஆணையர் ப.காந்திமதி, நகரப் பொறியாளர் ராஜேந்திரன், பி.எஸ்என்.எல் கோட்டப்பொறியாளர் கொளஞ்சி, தமிழ்நாடு மின்சார வாரிய செயற்பொறியாளர் ராமச்சந்திரன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
