இந்தியாவில் கருப்புப் பணத்தை ஒழிக்கும் விதமாக கடந்த செவ்வாயன்று நள்ளிரவு முதல் ரூ.500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். மேலும், வரும் டிசம்பர் 30ம் தேதிக்குள் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்ள வேண்டும் எனவும் பிரதமர் அறிவித்திருந்தார்.
இதனைத்தொடர்ந்து, மாநிலத்தின் பல்வேறு இடங்களில் ஏடிஎம் மையங்களில் அன்றைய தினம் பொதுமக்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து ரூபாய் நோட்டுகளை மாற்றிச் சென்றனர். இந்நிலையில், புதனன்று வங்கிகள் அனைத்திற்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. மேலும், புதன் மற்றும் வியாழன் ஆகிய கிழமைகளில் ஏடிஎம் மையங்களும் திறக்கப்படாது என அறிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, வியாழனன்று (இன்று) வங்கிகள் அனைத்தும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் காலை முதலே பொதுமக்கள் வங்கிகளின் முன்பு குவியத் தொடங்கினர். பொதுமக்களின் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும், அசம்பாவிதங்கள் ஏதேனும் ஏற்படாதவாறு வங்கிகளின் முன்பு காவல் துறை பாதுகாப்பும் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, கோவை பெரியகடை வீதியில் செயல்படும் இந்தியன் ஓவர்சீஸ் பேங்க்-யின் பொதுத் துணை மேலாளர் அஜய்குமார் சிங் நமது நிருபரிடம் கூறியதாவது:-
பிரதமர் அறிவிப்புக்குப் பின்பு இன்றுதான் வங்கிகள் அனைத்தும் திறக்கப்படுகின்றன. இன்றுமுதல் பொதுமக்களிடம் இருந்து பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் பெறப்பட்டு 100 ரூபாய் மற்றும் புதிய நோட்டுக்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஆதார் அட்டை, பாஸ்போர்ட், பான் அட்டை, ஓட்டுநர் அடையாள அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவற்றில் ஏதேனும் ஒரு உண்மை நகழினை காண்பிக்க வேண்டும். மேலும், விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அடையாள அட்டையின் நகழினை சமர்ப்பிக்க வேண்டும். ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு 4 ஆயிரம் ரூபாய் மட்டுமே பரிமாற்றம் செய்யப்படுகிறது. ஏடிஎம் மையங்கள் நாளை முதல் இயங்கத் துவங்கிவிடும். வாடிக்கையாளர்கள் தங்களது வங்கிக் கணக்கில் பணம் செலுத்த எவ்வித கட்டுப்பாடும் இல்லை. வங்கியில் இருந்து பணம் எடுக்க 10 ஆயிரம் வரை தற்காலிக உச்ச வரம்பு விதிக்கப்பட்டுள்ளது'' என்றார்.