கோவை மாவட்டம், நீலிக்கோணாம்பாளையத்தை அடுத்த அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி ஜெயநாயகி (67). புதனன்று இரவு 9 மணியளவில் இவர் தனது வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர் ஒருவர், ஜெயநாயகி கழுத்தில் அணிந்திருந்த 5.5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த ஜெயநாயகி கூச்சலிடவே, அக்கம் பக்கத்தினர் அப்பகுதியில் திரண்டனர். அதற்குள், அந்த மர்ம நபர் இரு சக்கர வாகனத்தில் மின்னல் வேகத்தில் சென்று மறைந்தார். இதுகுறித்து, ஜெயநாயகி அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த சிங்காநல்லூர் காவல் துறையினர், வழக்கு பதிவு செய்து செயின் பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபரைத் தேடி வருகின்றனர்.
அதேப்போல், கடந்த திங்கள்கிழமை டாடாபாத் பகுதியைச் சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவரிடம் 7 பவுன் தங்கச் சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர். மேலும், கோவையில் கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் சாலையில் நடந்து சென்ற 8 பேரிடம் மர்ம நபர்கள் செயின் பறிப்பில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.