கோவை அரசு மருத்துவமனையில் பிறந்து 2 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை 5 பேர் கொண்ட கும்பல் கடத்தி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை சிங்கநல்லூர் வரதராஜபுரம் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி ராஜன், ஜோதி தம்பதிகளுக்கு கடந்த 8 ம் தேதி கோவை அரசு மருத்துவமனையில் அழகான பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து ஜோதி அரசு மருத்துவமனையில் உள்ள பிரசவத்திற்கு பிந்தைய வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இவருடன் ஈரோடு பகுதியை சேர்ந்தவர் எனக்கூறி அர்ச்சனா என்பவரும் வார்டில் இருந்து வந்துள்ளார். தனது குழந்தை ஐசியூ வார்டில் இருப்பதாக அர்ச்சனா கூறி வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் இன்று மதியம் 1 மணியளவில் மருத்துவரை பார்க்க சென்ற ஜோதி தனது குழந்தையை பார்த்துக்கொள்ளுமாறு அருகில் இருந்த அர்ச்சனாவிடம் கூறிச்சென்றுள்ளார். திரும்ப வந்து பார்த்த போது அர்ச்சனாவும் குழந்தையும் மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஜோதி இது தொடர்பாக மருத்துவமனை அதிகாரிகள் மூலம் காவல்துறையில் புகார் அளித்தார்.
இதையடுத்து காவல்துறையினர் சிசிடிவி பதிவுகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். 3 பெண்கள் உட்பட 5 பேர் வாடகை கார் ஒன்றில் குழந்தையுடன் கிளம்பி செல்லும் காட்சிகள் பதிவாகியிருப்பதால் குழந்தையுடன் மாயமானவர்களை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.