500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை வைத்திருப்பவர்கள் டிசம்பர் 30-ம் தேதிக்குள் வங்கி, தபால் நிலையம் உள்ளிட்டவற்றில் மாற்றிக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், கோவையில் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, வீட்டு வரி, குடிநீர் வரி உள்ளிட்ட வரிகளை மக்கள் பழைய 500 மற்றும் 1000 ரூபாயைக் கொண்டு நவம்பர் 11ம் தேதியன்று (இன்று) ஒரு நாள் வரி செலுத்தலாம் என கோவை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலரான க.விஜயகார்த்திகேயன் அறிவித்திருந்தார்.

அதனடிப்படையில், இன்று (வெள்ளி) ஏராளமான பொதுமக்கள் கோவை மாநகராட்சி அலுவலகத்தில் வரி செலுத்த குவிந்தனர்.
இதுகுறித்து, வரி செலுத்த வந்த பொதுமக்கள் கூறுகையில்,
மாநகராட்சி அலுவலகத்தில் வழக்கத்தை விட இன்று மக்கள் கூட்டமாக வந்து வரிசையாக வரி செலுத்த காத்திருக்கின்றனர். மின்சார வரி, வீட்டுவரி உள்ளிட்டவற்றை செலுத்த வந்தோம். 500, 1000 ரூபாயினைக் கொண்டு இன்று மாநகராட்சியில் வரிசெலுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. இருப்பினும் நேற்று மாலை நேரத்தில் அறிவித்துவிட்டு இன்று ஒரு நாள் மட்டும் அவகாசம் அளித்திருப்பது போதுமானது அல்ல. பலருக்கும் இதுகுறித்த தகவல் சென்றடையவில்லை.

இதனால், பலரும் வங்கி, தபால் நிலையத்தில் 500, 1000 ரூபாய்களை மாற்றிக் கொண்டு வந்து இங்கு காத்திருக்கின்றனர். முன்னதாகவே இந்த அறிவிப்பினை வெளியிட்டிருந்தால் இன்னும் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக அமைந்திருக்கும். மேலும், வரியினைப் செழுத்த கூடுதல் வசதிகளை செய்ய வேண்டும்'' என்றனர்.
