கோவை மாவட்டம், பீளமேடு பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம். அதேப்பகுதியில் செயல்படும் தனியார் பொறியியல் கல்லூரியில் ஆய்வக உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் விஷ்ணு, அதேக் கல்லூரியில் உணவு விடுதியில் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், வியாழனன்று மாலை பணி முடிந்து தனித்தனி வாகனத்தில் இருவரும் வீட்டிற்கு திரும்பியுள்ளனர். சண்முகம் வீட்டிற்கு வந்துவிட்ட நிலையில், விஷ்ணு நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை. இதனிடையே, மர்ம நபர்களிடம் இருந்து தொலைபேசியில் அழைப்பு வந்துள்ளது. அப்போது அவர்கள், விஷ்ணுவை கடத்தியிருப்பதாகவும், 40 ஆயிரம் ரூபாய் தர வேண்டும் இல்லையென்றால் கொலை செய்துவிடுவோம் என மிரட்டியுள்ளனர். அதற்கு நாளை அந்தப் பணத்தினை தந்துவிடுவதாக சண்முகம் கூறியுள்ளார். தொடர்ந்து, பீளமேடு காவல் துறையினருக்கும் ரகசியத் தகவல் தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து, இன்று மர்ம கும்பல் கூறிய இடத்திற்கு சண்முகம் சென்றார். காவல் துறையினரும் பின்தொடர்ந்து சென்றுள்ளனர். காவலர்களைக் கண்ட மர்மகும்பல் விஷ்ணுவை காரில் இருந்து கீழே தள்ளிவிட்டு தப்பிச் சென்றனர். இதையடுத்து, விஷ்ணு கூறிய அடையாளம் மற்றும் ஆதாரத்தின் அடிப்படையில் காவல் துறையினர் 5 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியுள்ள வீடியோப் பதிவையும் சோதனையிட்டு வருகின்றனர்.