சூலூர் அருகே அரசு பள்ளி மாணவன் ஆசிரியர்கள் பள்ளியை விட்டு நீக்கிவிடுவதாக திட்டியதால் சனிக்கிழமை சானிப்பவுடர்குடித்தும் தூக்கிட்டும் தற்கொலை செய்துகொண்டார். தற்கொலை செய்ய தூண்டியதாக பள்ளி தலைமை ஆசிரியர் மீதும் வகுப்பு ஆசிரியர் மீதும் அப்பகுதியினர் சூலூர் போலீஸில் புகார் தெரிவித்தனர்.
சூலூர் செஞ்சேரிமலை அருகேயுள்ள எஸ்.குமாரபாளையத்தில் வசிக்கும் செல்வராஜ் மகன் எஸ்.சசிக்குமார்(14) செஞ்சேரியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறார். சனிக்கிழமை மதியம் தற்கொலை செய்துகொண்டதாக தெரிகிறது.
செஞ்சேரிமலையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் செல்வராஜின் இரண்டு மகன்களான ஜெயராமன்(16) பதினொன்றாம் வகுப்பும் சசிக்குமார் ஒன்பதாம் வகுப்பும் படித்து வருகின்றனர். இவர்களின் தந்தை கூலி வேலைக்கு சென்றுவருகிறார். இவர்கள் தலித் வகுப்பை சேர்ந்தவர்கள் என தெரிகிறது, கடந்த வாரம் பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரி மற்றும் வகுப்பாசிரியர் ஞானஜோதி ஆகிய இருவரும் வகுப்பறையில் மற்ற மாணவர்களின் நோட்டுகள் கிழிக்கப்பட்டிருப்பது சம்பந்தமாக சசிக்குமாரை கூப்பிட்டு கண்டித்துள்ளனர். அப்போது சசிக்குமார் தான் அச்செயலை செய்யவில்லை எனவும் அச்செயலை செய்த மாணவனையும் அடையாளம் காண்பித்துள்ளார். ஆனால் வகுப்பாசிரியர் ஞானஜோதி சசிக்குமார் மற்றும் அவரது அண்ணன் ஜெயராம் இருவரும் ஒழுங்கீனமானவர்கள் இவர்கள் தான் இச்செயலை செய்திருக்க கூடும் என தலைமை ஆசிரியரிடம் தெரிவித்ததாக தெரிகிறது. இதனால் பள்ளியை விட்டு நீக்குமாறும் பரிந்துரை செய்ததாக கூறப்படுகின்றது. தலைமை ஆசிரியர் சசிக்குமாரின் பெற்றோரை அழைத்து மாற்றுச்சான்றிதழ் பெற்று செல்லுமாறு கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த மாணவன் தற்கொலை கொண்டதாக கூறப்படுகிறது . போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். .