தமிழக அரசின் கீழ் இயங்கிவரும் டாஸ்மாக் மதுக்கடையில் விற்பனையை முறைப்படுத்தக்கோரி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் கோவை மாவட்டக் குழுவின் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

அம்மனுவில் கூறியிருப்பதாவது:- ''கோவை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளில் 24 மணி நேரமும் எவ்வித தடையுமின்றி மதுபானம் விற்பனை செய்யப்படுகிறது. தமிழக அரசு படிப்படியாக மது விற்பனையை குறைப்பது என்ற அறிவிப்பும் எவ்வித அவசரமும் இன்றி சாவகமாக நடைமுறைப்படுத்தப்படும் நிலையில் மதுக்கடைகளை படிப்படியாக மூடுவது ஒருபுறமிருந்தாலும் சட்டத்தை சரிவர அமல்படுத்தி சட்டப்படி குறந்தபட்சம் பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டும் மதுபானம் விற்பனை செய்ய வேண்டும்.
தற்போது மது விற்பனைக்கு நிர்ணயக்கப்பட்டுள்ள கால அளவு கடைபிடிக்கப்படாததாலும், அரசு மது விற்பனையை நாளுக்கு நாள் உயர்த்த ஆர்வமிக்க திறமையான அதிகாரிகளைக்கொண்டு திட்டமிட்டு இலக்கு நிர்ணயித்து, நிர்ணயித்த அளவிற்கு மேலும் முறையற்று விற்பனை செய்வதாலும், அன்றாடம் கூலி வேலை செய்து தங்களது வாழ்வை நடத்தும் ஏழை மக்களும், அவர்களது குழந்தைகளும் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள்.
எனவே, இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் உரிய விசாரணை நடத்தி மதுபானம் விற்பனை செய்யும் துறையில் அனுமதிக்கப்பட்ட காலநேரம் தவிர மற்ற நேரங்களில் மது விற்பனையை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து, அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் கோவை மாவட்ட துணைத் தலைவர் சக்திவேல் கூறுகையில்,
''அதிமுக பதவிக்கு வந்தவுடன் தமிழகத்தில் மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதனடிப்படையில், சில கடைகள் மூடப்பட்டன. மேலும், மதுவிற்பனைக் கடைகளில் நேரமும் குறைக்கப்பட்டன. ஆனால், தற்போது எந்த டாஸ்மாக் மதுபான விற்பனைக் கடைகளிலும் நேரம் கடைபிடிக்கப்படுவதில்லை. இரவு, பகல் பார்க்காமல் கூடுதல் நேரத்தில் மது விற்பனை நடைபெருகிறது. ஆளுங்கட்சியினரே பெரும்பாலான டாஸ்மாக் கடைகளை நிர்வகித்து வருவதால் சட்டங்களை பின்பற்றுவதில்லை என கூறப்படுகிறது. மாவட்ட நிர்வாகம் இதில் உரிய கவணம் செலுத்தி மதுபான விற்பனை முறைகேட்டை கட்டுப்படுத்த வேண்டும்'' என்றார்.