கோவையில் தனியார் பள்ளியில் மாணவனை தாக்கிய ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவனின் தந்தை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம், காந்திபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரன். இவர் அதேபகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரது மகன் கிஷோர் சித்தாப்புதூர் பகுதியில் செயல்பட்டு வரும் மேரி ராணி மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் யு.கே.ஜி பயின்று வருகிறார்.
இந்நிலையில் கடந்த வாரம் கிஷோர் பள்ளியில் உள்ள கழிவறையில் தண்ணீரை கொட்டியதற்காக அவரது வகுப்பு தமிழ் ஆசிரியை ஹன்சன்னி, கிஷோரை அடித்ததாகக் கூறப்படுகிறது. பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த கிஷோருக்கு உடல் நிலை சரியில்லாமல் ஆகியுள்ளது. இதையடுத்து கிஷோரின் தந்தை மகேந்திரன் ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் அளித்த புகாரையடுத்து காவல் துறையினர் பள்ளி நிர்வாகத்தினரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், இந்த சம்பவத்தையடுத்து கிஷோர் பள்ளிக்கு செல்ல பயப்படுவதாகவும், ஆசிரியை அடித்ததால் காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவரின் தந்தை மகேந்திரன் தெரிவித்துள்ளார். மேலும், சிறு மாணவ, மாணவிகளை இதுபோன்று கொடுமையாக தாக்கிய ஆசிரியை மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுகொண்டுள்ளார்.