மருத்துவ படிப்பு முடித்த மாணவர்களுக்கு எக்சிட் தேர்வு வைக்க இருப்பதாக மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த தேர்வு முறையை எதிர்த்து கோவை அரசு மருத்துவ கல்லூரி மாணவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள் இன்று அரசு மருத்துவமனை வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து அக்கல்லூரியின் மாணவர் பிரதிநிதியான விட்மன் அறிவுமதி கூறியதாவது :-
மத்திய மற்றும் மாநில அரசுகளின் அங்கீகரிக்கப்பட்ட தேர்வுகளை எழுதியே நாங்கள் இந்த படிப்பை படித்து வருகிறோம். ஆனால் தற்போது எக்சிட் தேர்வு முறை வைக்க இருப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது. இந்த முறை அமலுக்கு வந்தால் இந்தியாவில் மருத்துவர்கள் எண்ணிக்கை குறையும். வெளிநாடுகளிலும், தனியார் மருத்துவ கல்லூரி மாணவர்களிடையேயும் நடத்தப்பட வேண்டிய இந்த தேர்வை, அரசு மருத்துவ கல்லூரி மாணவர்களிடையே நடத்துவது ஏற்புடையதல்ல. உடனடியாக இதை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.
