கூட்டுறவு விற்பனை சங்க அதிகாரிகள் பழைய ஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை வாங்க மறுப்பதால் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் எழுபது டன் உருளைக்கிழங்கு விற்பனையாகாமல் தேங்கியுள்ளது. இதனால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் விளையும் உருளைக் கிழங்குகள் அங்குள்ள விவசாயிகளால் லாரிகள் மூலம் மேட்டுப்பாளையத்தில் உள்ள நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கத்திற்கு கொண்டுவரப்படும். தினசரி இப்படி டன் கணக்கில் கொண்டு வரப்படும் இந்த உருளைக் கிழங்குகள் பின்னர் இடைத்தரகர்கள் யாருமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்து இங்கு வரும் மொத்த வியாபாரிகளிடம் நேரிடையாக ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டு கூட்டுறவுத்துறை அதிகாரிகளால் விவசாயிகளுக்கு பணம் வழங்கப்படும்.
இந்நிலையில் நேற்று முதல் கூட்டுறவு சங்கத்தில் இனி பழைய ஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் வாங்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டவுடன் உருளைக்கிழங்கு விற்பனை அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. அரசு தற்போது வெளியிட்டுள்ள புதிய ரூபாய் நோட்டுக்கள் மற்றும் நூறு ரூபாய் நோட்டுக்களின் தட்டுப்பாடு காரணமாக உருளைக்கிழங்கை வாங்க எந்த மொத்த வியாபாரிகளும் வரவில்லை. இதனால் விவசாயிகள் கொண்டுவந்த உருளைக்கிழங்குகள் விற்பனையின்றி தேங்கிவிட்டன.

இன்று ஒரு நாளில் மட்டும் எழுபது டன் வரை உருளைக்கிழங்கு தேங்கியுள்ளதாகவும், இவை தேங்கினால் அழுகிவிடும் என்பதால் தாங்கள் கடும் இழப்பிற்கு ஆளாகி வருவதாகவும் வேதனை தெரிவிக்கும் விவசாயிகள், அத்தியாவசிய மற்றும் அழுகும் பொருட்களுக்கு உடனடியாக மாற்று ஏற்பாடு தேவை என கோரிக்கை வைத்துள்ளனர்.