புழக்கத்தில் உள்ள ரூ. 500, ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை டிசம்பர் 31 ஆம்தேதிவரை மக்கள் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி கோவையில் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பாஜக தலைமையிலான மோடி அரசு கடந்த 8 ஆம்தேதி இரவு திடீரென ரூ500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவித்தது. இதனையடுத்து சிறுகுறு தொழில்கள் மற்றும் வியாபாரம் ஆகியவை முடங்கின. அமைப்பு சார தொழிலாளர்கள் மாதந்திர, வாரந்திர கூலியை பெற முடியாத சூழல் உருவானது. மேலும் கடந்த ஒரு வார காலமாக அனைத்து வங்கி மற்றும் ஏடிஎம் மையங்களில் நூற்றுக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் நின்று சிறிய தொகையை எடுப்பதற்கு பல மணிநேரம் காத்திருக்க வேண்டியிருக்கிறது. இத்தகைய மக்கள் விரோத செயல்பாட்டை கண்டித்து நாடு முழுவதும் மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் போராட்டங்களை நடத்த அறைகூவல் விடுத்தது.
இதன் ஒருபகுதியாக கோவை பவர்ஹவுஸ் முன்பு சிபிஎம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் மோடி அரசு வெளிநாட்டில் பதுக்கியுள்ள பணத்தை பிடிக்க திறன் இல்லாமல், கார்ப்ரேட்டுகளின் நலனுக்காக உழைப்பாளி மக்களின் பணத்தை பிடுங்குவதாகவும் குற்றம் சாட்டி முழக்கங்களை எழுப்பினர். இதுகுறித்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற முன்னாள் எம்.பி பி.ஆர்.நடராஜன் செய்தியாளர்களிடம் பேசுகையில், கருப்பு பணத்தை பிடிக்கிறேன் என்று சொல்லி அனைத்து தரப்பு மக்களின் அன்றாட செலவு பணத்தை பிடுங்கும் மோடி மறுபுறம் விஜய் மல்லையா உள்ளிட்ட கார்ப்ரேட் நிறுவனங்கள் வங்கியில் வாங்கியுள்ள 43 ஆயிரம் கோடி ரூபாயை தற்போது தள்ளுபடி செய்துள்ளது.
இது வன்மையாக கண்டிக்கத்தக்கது மோடியினால் ஒரு போதும் கருப்பு பணத்தை மீட்க முடியாது. மாறாக உழைப்பாளி மக்களின் பணத்தை மட்டும்தான் பறிக்க முடியும் என்று குற்றம் சாட்டினார்.