குடும்ப அட்டை வழங்க அலைக்கழித்ததால் விரக்தி அடைந்த 2 குழந்தைகளின் தாய் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கையை அறுத்துக்கொண்டு தற்கொலை செய்துகொள்ள முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவை பால் கம்பெனி, தடாகம் பேருந்து நிலையம் அருகே வசித்து வருபவர் மீனா. கணவர் செந்திலால் கைவிடப்பட்ட மீனாவிற்கு 9 வயதில் மவுனிகா மற்றும் 7 வயதில் மிதுன் குமார் ஆகிய குழந்தைகள் உள்ளது. அப்பகுதியில் தனியாக வசித்து வருகிறார்.
இதனிடையே, கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக குடும்ப அட்டை வழங்கக் கோரி மீனா பல முறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் தாலுகா அலுவலகங்களில் மனு அளித்தும் இதுவரை குடும்ப அட்டை வழங்கப்படவில்லை.
இருதய நோயால் பாதிக்கப்பட்டுள்ள மகள் மவுனிகாவிற்கு சிகிச்சை அளிக்க முடியாமலும், குழந்தைகளுக்கு சாதிசான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களையும் பெற முடியாமலும் மீனா தொடர்ந்து அலைக்கழிக்கப்பட்டு வந்துள்ளார். இதனால் விரக்தி அடைந்த அவர் வெள்ளியன்று (இன்று) கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து தனது இடது கை மணிக்கட்டை பிளேடால் அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.
இதனைக்கண்ட பாதுகாப்பிற்கு நின்றிருந்த காவல் துறையினர் உடனடியாக அவரை தடுத்து நிறுத்தி முதலுதவி சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து குடிமைப்பொருள் அதிகாரிகளிடம் அவரை அழைத்துச் சென்று முறையிட்டனர்.

இதைத்தொடர்ந்து, விசாரணை நடத்திய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து அவரை போலீசார் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவத்தால் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.